ஆனந்த விகடனுக்கு இதுவும் கிளுகிளுப்புதான்!
வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தாங்களாகவே வேலையை விட்டு விலகுவதாக எழுதித்தர வேண்டும் என்று மிரட்டல் பாணியில் கூறியுள்ளது. இந்த செய்தி வைரலாக, சமூக ஊடகங்களில் பலத்த எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இதன் எதிர்வினையாக விரல்விட்டு எண்ணக்கூடிய வகையில் ஒரு சிலர் மட்டுமே தங்களது கோபத்தைத் தெரிவித்துள்ளனர். ஆனால், சிலரோ நம்ம விகடனிலா இது நடந்ததுள்ளது என்று வேதனைப்பட்டுள்ளனர். விகடனின் குரூர முகம் தெரியாததால் ஏற்படும் அனுதாபம் மட்டுமல்ல இது பத்திரிகைகள், பத்திரிகையாளர்களின் குறித்து பிரமைகளின் வெளிப்பாடே இது.
விகடனில் பணி புரிந்த முன்னாள் ஆசிரியர் கம்பெனியில் நஷ்டம் என்ன செய்வது என்று புலம்பியிருந்தார். ஒரு பெரிய நிறுவனம் வெறும் 40 நாட்கள் கொரோனா ஊரடங்கினால் (அதன் பத்திரிகைகள் வெளி வந்து கொண்டுதான் இருந்தது என்பதும் அது நிறுத்தப்படவில்லை என்பதும் வேறு விசயம்) நஷ்டமாகி விட்டது என்பதை சிறுகுழந்தைகளால் கூட ஏற்றுக்கொள்ள முடியாத கயமைத்தனமாகும்.
முதலாளியின் உற்பத்தி பொருள் விற்காவிட்டாலோ, வேறு வகையில் கம்பெனி நஷ்டமானாலோ தொழிலாளி காரணமாக இருக்க முடியாது என்ற அடிப்படை விசயம் கூட தெரியாமல் ஒருவர் ஆசிரியராக என்ன குப்பைக் கொட்டினாரோ தெரியவில்லை.
சமூக நீதிகளுக்காக நின்றதா விகடன்?

1929இல் திரைப்பட ஸ்டுடியோ முதலாளி வாசன் என்பவரால் தொடங்கப்பட்ட ஆனந்த விகடன், பின்னர் பாலசுப்பிரமணியனால் வளர்க்கப்பட்டது. சமூக அநீதிகளுக்காக நின்றதாக ஒரு பிரமை இப்போது நிலவுகிறதே, அப்படியெல்லாம் அவர்கள் தொடங்கிய காலத்தில் இல்லை. உண்மையில் அது புது போக்கை தொடங்கி வைத்தது. நடுத்தர வர்க்க வாசகர்களுக்கென லைட் ரீடிங் எனப்படும் மேம்போக்கான வாசித்தல் முறையை உருவாக்கியது. படிப்பவரின் மூளையை எந்த அளவிலும் கஷ்டப்படுத்தாமல், அதே சமயத்தில் அலுவலகம் செல்லும் நடுத்தர வர்க்கத்தை சொறிந்து விடும் எதையும் காமெடியாக, அவர்களின் பாஷையில் கூறினால் ஹாஸ்யமாக எடுத்துக் கொள்ளும் மனோபாவத்தை உருவாக்கியது.
நடுத்தர வர்க்கம் அலுவலக இடைவெளி நேரத்தில், அரட்டை அடிப்பதற்கான விசயங்கள், துணுக்கு தோரணங்கள், பெண் ஆணை வேலை வாங்கும் ஜோக்குகள் என பிற்போக்கான விசயங்களை கொண்டு அமைந்திருந்தது அதன் உள்ளடக்கம். அதன் மொத்த நோக்கமே வாசகனை சீரியசாக சிந்திக்க விடாமல் கிளுகிளுப் பூட்டுவது என்பதாகவே இருந்தது. மொத்தத்தில் அது பொழுதுப் போக்கிற்கான பத்திரிகையாகவே சாதி இந்துக்களால் குறிப்பாகப் பார்ப்பனர்களால் பார்க்கப்பட்டது, கருதப்பட்டது. அதன் லட்சிய நோக்கிற்கேற்ப எம்பளமாக சிரித்துக்கொண்டிருக்கும் ஒரு முதியவரின் படத்தையும் இதழின் பெயரையும் அமைத்துக்கொண்டது விகடன்.
கனமான, ஆழமான விசயங்களைப் படிப்பதைத் தவிர்ப்பதற்கும் பொழுது போக்கிற்காக படிப்பதற்கும் வாசகர்களின் மனங்களைத் தயார்ப் படுத்தியதற்கு அன்றே அடித்தளம் அமைத்தது விகடன்தான். விகடன் குழுமம் வெளிக்கொண்டு வந்த ஜூனியர் விகடனில், ராத்திரி ரவுண்ட் அப் என்ற பெயரில் கிசுகிசுக்களை செய்தியாக்கும் கலாச்சாரத்தைத் தொடங்கி வைத்தது. புலனாய்வு ஸ்டோரி என்ற பெயரில் அரசியல் கிசுகிசுக்களை வாசகர்களுக்கு அளித்து சுவாரஸ்யமாக அரசியலைப் பார்க்க வைத்தது. பின்னர் காலப்போக்கில் தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட தலித் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சிகள், மக்களின் கல்வி அறிவு உயர்வு, அரசியல் மாற்றங்கள், பெரும் ஊழல்கள் மற்றும் ஊடகங்களின் ஏற்பட்ட மாற்றங்கள் போன்றவை வாசகர்களின் அநீதிகளுக்கு எதிரான சமூக உணர்வை வளர்த்தன. இதன் விளைவாக வாசகர்களுக்கேற்ப (சந்தைக்கேற்ப) சமூக அக்கறையுடன் உள்ள சில பத்திரிகையாளர்களைக் கொண்டு கட்டுரைகளை எழுத வைத்தனர். அதே போன்று லாபம் கொழிக்கத் தொடங்கியவுடன் சமுகத்திலுள்ள பிரிவினர் மற்றும் துறைவாரியாக தனித்தனியாக இதழ்கள் தொடங்கப்பட்டன. பெண்களுக்கு அவள் விகடன், இலக்கியவாதிகளுக்காக தடம், மருத்துவத் துறையினருக்கு டாக்டர் விகடன், மோட்டர் துறையினருக்கு மோட்டர் விகடன், ஆன்மீக வாதிகளுக்கு சக்தி விகடன், குழந்தைகளுக்குச் சுட்டி விகடன், விவசாயிகளுக்குப் பசுமை விகடன், பொருளாதாரத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு நாணயம் விகடன், சமைப்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு கிட்சென் விகடன், பகுதிவாரியான வாசகர்களைக் கவர என் விகடன் என வரிசையாக பத்திரிகைகள் சந்தையை ஆக்கிரமித்தன. ஆனாலும் விகடனின் லாப வெறி அடங்கவில்லை.
உழைக்கும் பத்திரிக்கையாளர்கள் சட்டத்தை காற்றில் பறக்கவிட்ட ஊடகங்கள்

டைம்பாஸ் என்ற பெயரில் படுகேவலமான ஆபாசமான படங்களை போட்டு சினிமா இதழ் ஒன்றையும் வெளியிட்டது. இருப்பினும் அதன் வியாபாரம் படுத்து விட்டது. இதனைத் தொடர்ந்து அதன் பல பத்திரிகைகள் விற்கவில்லை. ஆனந்த விகடன் டாட் காம் என்ற இணைய இதழைத் தொடங்கி அதை நம்பர் ஒன்றாக மாற்றவும் முயன்றனர். இதற்கிடையே சுமார் 300ற்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களை வேலைக்கு நியமித்தனர். இவர்கள் அனைவரும் முறையாக, பத்திரிகையாளர்களாக ஆவதற்கான சட்டப்படி (உழைக்கும் பத்திரிகையாளர்கள் சட்டம்) எல்லாம் எடுக்கவில்லை. சிலரை ஒப்பந்த அடிப்படையிலும் சிலரை வாய்மொழி மூலமாகவும் நியமித்தனர். ஹயர் அன்ட் பயர் சிஸ்டத்தின் மூலமாக அதாவது எந்த தொழிலாளர் சட்டமும் இன்றி தான்தோன்றித்தனமான ஆதிகாலத்துத் தொழிற்புரட்சி காலத்து முதலாளித்துவ சுரண்டல் முறை போன்றே வேலைக்கு எடுத்தனர். அவர்களுக்குப் பணிச் சுமை மிக அதிகமாகவே அளிக்கப்பட்டது.
அறிவு சார்ந்த பணியை தொழிற்சாலை சரக்கு உற்பத்தியைப் போல், ஒவ்வொரு பத்திரிகையாளரும் இவ்வளவு செய்திகளும் கட்டுரைகளும் அளிக்க வேண்டும் என பத்திரிக்கையாளர்கள் நிர்பந்திக்கப்பட்டனர். ஒரே சமயத்தில் டிஜிட்டல் மீடியாவுக்கும் பத்திரிகைக்கும் ஒரு பத்திரிகையாளர் செய்தி அளிக்க வேண்டும். செய்திகளின் எண்ணிக்கை அளவை நிர்வாகமே முடிவு செய்தது. இந்த பணிச்சித்ரவதையை தாங்க முடியாமல் பலர் வெளியேறினார்கள். அரசு எதிர்ப்பு என்பது எப்போதுமே மென்மையாக இருக்கும். கருத்துச் சுதந்திரம் நிர்வாகத்தின் விருப்பங்களுக்கும் விளம்பர நலன்களுக்கும் உட்பட்டதாகவே இருக்கும். சமூக மசாலா தூவி (பெண்ணிய மசாலா, அரசியல் மசாலா, மருத்துவ மசாலா இன்ன பிற) இன்பாக்ஸ் கவர்ச்சி படங்கள் சில கதைகள் என ஒரு கதம்பமாக இருக்கும். மேலும், நடுத்தர வர்க்கத்தைத் தடவிக் கொடுக்கும் உள்ளடக்கமாக, நான்கு பக்கத்திற்கு சில மன்னர் காலத்தையும், நடப்பு காலத்தையும் மிக்ஸ் செய்தும் மற்றும் திராவிட அரசியல்வாதிகளை (பார்ப்பன அதிகாரிகள், அரசியல்வாதிகள் இதில் விதிவிலக்கு) நக்கல் செய்யும் ஜோக்குகள் இடம் பெற்றிருக்கும். இதில் முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை படிக்கும் வாசகர் எந்த சமூக உணர்வையும் பெற முடியாதபடி அதாவது உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு(from construction to deconstruction) விடுவார்.
மாணவப் பத்திரிக்கையாளர்களை சுரண்டும் விகடன்

விகடனின் சுரண்டலின் உச்சமே மாணவர் பத்திரிகையாளர்களைத் தேர்வு செய்து, கிளுகிளுப்பு பத்திரிகை எழுத்துக்குப் பழக்கி அவர்களையும் சமூக உணர்வின்றி மூளைச்சலவை செய்வதுதான். அவர்களின் இளம் வயதின் ஆக்கப்பூர்வ திறமைகளை நயவஞ்சமாக சுரண்டிக் கொள்வதுதான். இதை பெருமையாகக் கருதி அந்த குழுமத்திற்காகவே உழைத்துத் தேய்ந்து போனவர்கள் எத்தனையோ பேர். இந்த கார்ப்ரேட் மடிசார்களின் சுரண்டலை மறைக்க ஆண்டுக்கொரு முறை சமூகப் போராளிகளுக்கு சிறந்த ஆளுமைக்கான விருதுகளையும், டாப் டென் என்ற பெயரில் இந்த டாப் பத்திரிகை முதலாளிகள் ஏதாவது ஒரு கம்பெனியின் ஸ்பான்சரில் வழங்குவார்கள். விகடனின் நிர்வாக சித்ரவதை தாங்க முடியாமல் வெளியேறியவர்களும், வெளியேற்றப்பட்டவர்களும் கார்ட்டூனிஸ்ட் மதன், ஞானி தொடங்கி தற்போது 176 பேர் வரை பட்டியல் நீளுகிறது. இதில் தடம் உள்ளிட்ட திடீரென்று நான்கு பத்திரிகைகள் நிறுத்தப்பட்டு பலர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதுதான் ஊடக சுதந்திரமா?

உழைக்கும் பத்திரிகையாளர்கள் சட்டத்தை ஆனந்த விகடன் குழுமம் உள்ளிட்ட எந்த தமிழ் நாளிதழும், வார, மாத பத்திரிகைகளும் காகிதமாகக் கூட மதிப்பதில்லை. இதுவரை விரல் விட்டு எண்ணக்கூடிய சில நாளிதழ்கள், ஒரு சில பத்திரிகைகள் தவிர அனைத்துமே காட்டுமிராண்டித்தனமான முதலாளித்துவ சுரண்டல் முறையான ஹையர் அன்ட் பயர் சிஸ்டத்தைதான் பின்பற்றுகின்றன.
ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் உள்ளிட்ட அந்த குழுமத்தின் வளர்ச்சி முதலாளியால் வந்ததல்ல. எண்ணற்ற பத்திரிகையாளர்களின் கடும் உழைப்பால் வந்தது ஆகும். வெளியேற்றப்பட்டவர்களின் வாழ்வாதாரம் என்ன ஆகும், அதுவும் லாக் டவுன் காலத்தில். இதைப்பற்றி விகடனின் முதலாளிகளுக்குச் சிறிதும் அக்கறையில்லை அவர்களின் லாபம் குறைவதால்தான் (நஷ்டம் அல்ல) ஆட்குறைப்பு செய்துள்ளனர். இது குறித்து பத்திரிகை தர்மம், சமூக அக்கறை, நாட்டு நலன், மக்கள் நலன் என்று வாய்கிழியப் பேசும் பெரும் பத்திரிகை நிறுவனங்களான இந்து, தினகரன் தினமணி உள்ளிட்ட எந்த நிறுவனமும் செய்தி வெளியிடவில்லை. ஏனெனில், எந்த பத்திரிகை முதலாளியும் இன்னொரு முதலாளியை விட்டுக் கொடுப்பதில்லை. ஒரு பத்திரிகையின் சுரண்டலில், அங்கு நடக்கும் அக்கிரமங்களில், பாலியல் அத்துமீறல்களில் அவர்கள் தலையிடுவதில்லை. இப்படித்தான் அவர்களுக்குள் வர்க்க மற்றும் சாதிய ஒற்றுமையைக் கட்டிக் காப்பாற்றிக் கொள்கிறார்கள். இதுதான் ஊடகங்களின் உண்மையான கோர முகம்.
இன்னொரு விசயத்தையும் இங்குக் குறிப்பிட்டாக வேண்டும். ஒரு பத்திரிகையாளருக்கு நடக்கும் அநீதிகளை மற்றொரு பத்திரிகையாளர் தட்டிக் கேட்பதில்லை. அவர்கள் அப்படிக் கேட்டாலும் கூட பத்திரிகையாளர்கள் மீது நடைபெறும் அநீதிகளை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களில் அவர்கள் கலந்து கொள்வதும் இல்லை. ஏனெனில் பாதிக்கப்பட்டவர் ஒரு புகாரைக்கூடப் பத்திரிகையாளர் சங்கத்தில் அளிக்க அஞ்சுவார். நாள்தோறும் எந்த பணி பாதுகாப்புமின்றி, உத்தரவாதமில்லாத அச்ச உணர்வுடன் வாழப் பழகிக் கொள்கிறார் என்பது வேதனைக்குரிய விசயம்.
பல அரசியல் தலைவர்களையும் பிரபலங்களையும் நட்சத்திரங்களையும் பேட்டி காணும் வாய்ப்பு உள்ளதால் தானும் சமூகத்தில் ஒரு முக்கிய புள்ளி என்றும் தனக்கும் அதிகாரங்கள் உள்ளது என்று நம்ப வைக்கப்பட்டு அந்த நம்பிக்கையுடன் வாழ்கிறார்கள் பத்திரிக்கையாளர்கள். ஓய்வு பெற்றவுடன் அவரை யாரும் மதிப்பதில்லை என்பதைக் கூட கருத்தில் கொள்ளாமல் சென்ற கால நினைவுகளுடன் வாழ்ந்து முடிக்கிறார்கள். அவர்களுக்கென எந்த சுதந்திரமும் இல்லை, உண்மையில் பத்திரிகை சுதந்திரம் என்பதே இல்லை. அது பத்திரிகை முதலாளிகளின் சுதந்திரம் என்பதைக்கூட அவரால் புரிந்து கொள்ள முடிவதில்லை. கற்பனையான அதிகார கனவுகளுடன் இருக்கும் பத்திரிகையாளர்கள் எப்போதுதான் கனவுலகிலிருந்து யதார்த்தத்திற்குத் திரும்புவளோ?. எப்போதுதான் தனது உண்மை நிலையை உணர்வார்களோ?.
பி.கு: பத்திரிகை நிறுவனங்களில் பணியாற்றும் பத்திரிக்கையாளர்களுக்கும், நேரடியாக ஆசிரியர் குழு அல்லது பத்திரிக்கை சார்ந்த பிற துறைகளில் பணியாற்றும் பிற ஊழியர்களுக்கும் உழைக்கும் பத்திரிக்கையாளர்கள் சட்டம் மட்டுமே பொருந்தும். மற்ற தொழிற்சாலைகள் சட்டம் பொருந்தாது.
உழைக்கும் பத்திரிக்கையாளர்கள் சட்டத்தின்படி ஒருவர் நியமிக்கப்பட்டால், அவருக்கு அந்த சட்டத்தின்படி ஊதியம் அளிக்க வேண்டும். தந்திரமாகப் பத்திரிக்கை முதலாளிகள் இந்தச் சட்டத்தைப் பின்பற்றுவதே இல்லை.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக